தனது குழந்தையின் உயிரையும், தனது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக தற்காப்பு செயலில் ஈடுபட்டு கொலை வழக்கை சந்தித்து வரும் எனது பெண் கட்சிக்காரர் ஒருவரின் வழக்கு விசாரணைக்கு தயாராகி வரும் போது கிடைத்த ஒரு வழக்கின் தீர்ப்பே இந்தப் பதிவு.
இந்த வழக்கில் கண்ட 1வது எதிரியான சுகுமாறன் என்பவர் வனச் சரக அலுவலர் ஆவார். அவர் தர்மபுரி வனப்பகுதியில் பணியாற்றி வந்தார். 1988 ஆம் ஆண்டு காலை 6.30 மணிக்கு அலுவலக ஜீப்பில் ஓட்டுநரான சின்னக்குழந்தையுடன் பென்னாகரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரியில் ஜான் பாஷா, கணேஷ் மற்றும் லாரியின் கிளீனர்கள் என மொத்தம் நான்கு பேர் சென்று கொண்டு இருந்தனர் லாரியை பார்த்ததும் வனச் சரக அலுவலரான சுகுமாறன் ஜீப்பில் அந்த லாரியை கொஞ்சம் தூரம் விரட்டியுள்ளார். ஆனாலும் லாரியை ஜான் பாஷா நிறுத்தவில்லை சிறிது தூரம் சென்ற பின் லாரியை நிறுத்தி அனைவரும் ஓடியுள்ளனர். உடனே சுகுமாறன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
துப்பாக்கி குண்டு ஜான் பாஷா முதுகில் பட்டு அவர் இறந்து விடுகிறார். பின்னர் சுகுமாறனும் அவரது டிரைவரும் காட்டுப் பகுதியிலிருந்து சில சந்தன மரங்களை லாரியில் வைத்து ஒரு துப்பாக்கியையும் வைத்து, தற்காப்புக்காக சுட்டதாக கூறி ஒரு புகாரை அளித்து கொலையிலிருந்து தப்பிக்க நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் என்பது அரசு தரப்பு வழக்காகும்.
இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் வனச் சரக அலுவலரான சுகுமாறனுக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு அதற்கேற்ப தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் ஜீப் ஓட்டுநரான சின்னக்குழந்தையை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சுகுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஆனால் டிரைவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு ஏதும் செய்யவில்லை.
மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சுகுமாறனை விடுதலை செய்தது. இருப்பினும் சுகுமாறன் தற்காப்பு உரிமையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளார் என்று கூறி அவருக்கு 304 பகுதி II ன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அதனை எதிர்த்து சுகுமாறன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. ஆர். சுபாஷ் ரெட்டி விசாரித்தார்.
இந்த வழக்கில் கண்ணால் கண்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி உள்ளனர் சம்பவம் எவ்வாறு எப்படி நடந்தது என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் ஏதுமில்லை நான்குபேர் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர் அந்த சாட்சியத்திலும் குறைபாடுகள் உள்ளன.
சுகுமாறன் தற்காப்புஎகாகவே சுட்டதாக கூறுகிறார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 96 முதல் 106 வரையிலான பிரிவுகள் தற்காப்பு உரிமைகளை பற்றி கூறுகிறது தற்காப்புக்காக செய்யப்படும் ஒரு செயல் குற்றமில்லை என்று பிரிவு 96 கூறுகிறது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு குற்றத்திலிருந்தும் ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்வது மட்டுமின்றி வேறொரு நபரையும் காப்பதற்காக தற்காப்பு உரிமையை பயன்படுத்தலாம் என்று பிரிவு 97 கூறுகிறது திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றங்களிலிருந்து ஒருவர் தன்னையும் & வேறு ஒருவருடைய சொத்தையும் காத்துக் கொள்ள தற்காப்பு உரிமையை பயன்படுத்தலாம்.
பாதுகாப்புக்காக அரசு அதிகாரிகளின் உதவியை கேட்பதற்கு அவகாசம் இருக்கும் பட்சத்தில் அந்த உரிமை கிடையாது என்ற நிலையிலும் பாதுகாத்து கொள்ளும் அளவுக்கு தேவைப்படுவதை விட அதிக தீங்கை ஒருவருக்கு ஏற்படுத்தக்கூடாது என்பது முக்கியமானது தற்காப்பு உரிமையை பயன்படுத்துபவருக்கு மரணமோ அல்லது கொடுங்காயமோ ஏற்படும் என்ற அளவுக்கு உண்மையான அச்சம் ஏற்பட வேண்டும் சொத்தை பொறுத்தவரையில் ஏற்படும் அச்சம் பிரிவு 103 ல் கூறப்பட்டுள்ளவாறு இருக்க வேண்டும் சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமையின் வரம்பு குறித்து பிரிவு 105 ல் கூறப்பட்டுள்ளது மேலும் இதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றம் அம்ஜத்கான் Vs உஹாஜி முகமத் கான் (AIR - 1952 - SC - 165) என்ற வழக்கில் விளக்கியுள்ளது.
அதேபோல உச்சநீதிமன்றம் தர்ஷன் சிங் Vs பஞ்சாப் மாநில அரசு மற்றும் ஒருவர் (AIR - 2010 - SC - 1212) என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 96 முதல் 106 வரையிலான பிரிவுகள் குறித்து பத்து கோட்பாடுகளை வகுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
1. தற்காத்து கொள்வது என்பது ஒரு மனிதனின் அடிப்படை இயல்பு அனைத்து நாடுகளும் இந்த தற்காப்பு உரிமையை அங்கீகரித்துள்ளது.
2. தானே ஏற்படுத்திக் கொள்ளாத, வரவிருக்கும் ஆபத்தை தடுக்க வேண்டிய நிலையில் அதனை திடீரென எதிர்கொள்ள தற்காப்பு உரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. நியாயமான அச்சத்தின் காரணமாக தற்காப்பை செயல்படுத்துவதே போதுமானது அதாவது தற்காப்பு உரிமையை எழுப்பும் பொருட்டு குற்றம் உண்மையாக நடந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை தற்காப்பை பயன்படுத்தாவிட்டால் பேரிழப்பு ஏற்படும் என்றாலே போதுமானதாகும்
4. தற்காப்பு உரிமையானது பயம் ஏற்படும் அந்த நொடியே தொடங்கி விடும் அந்த உரிமை பயம் நீங்கும் வரை தொடரும்.
5. தாக்குதலுக்கு உள்ளாகும் நபர் தனது உயிருக்கு ஆபத்து வரட்டும் என்று காத்திருக்க முடியாது.
6. தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் நபர் காட்டும் வலிமையானது ஒரு நபரை அல்லது சொத்தை பாதுகாப்பதற்கு தேவைப்படுகிற அளவை விட மிக அதிகமானதாக இருக்கக்கூடாது.
7. குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்பு உரிமையை பற்றி வழக்கு விசாரணையின் போது கூறப்படாவிட்டாலும் கூட, ஆவணங்களை ஆய்வு செய்யும் போது தற்காப்பு உரிமை துலங்குமானால் அதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
8. குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்பு உரிமை குறித்து துல்லியமாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதில்லை.
9. சட்டத்திற்கு முரணான அல்லது தவறான செயல் ஒன்று குற்றமாக இருந்தால் மட்டுமே தற்காப்பு உரிமையை பெற முடியும்.
10. தனது உயிரையோ அல்லது உடலையோ இழப்பதற்குரிய ஆபத்து ஏற்படப்போவதாகநம்பும் ஒருவர்தான் தாக்க முற்படும்போதோ அல்லது நேரடியாக அச்சுறுத்தப்படும்போதோ தற்காப்பு உரிமையை பயன்படுத்தி மரணத்தை கூட ஒருவருக்கு ஏற்படுத்தலாம்
இந்த வழக்கில் சுகுமாறன் தனக்கோ அல்லது தன் ஓட்டுநருக்கோ மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படலாம் என்று அச்சப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன சுகுமாறன் ஒரு அரசு அதிகாரி அவர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார். பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது லாரியை நிறுத்தாமல் சென்று உள்ளனர். பின்னர் லாரியை நிறுத்தி ஓடத் தொடங்கியதோடு மட்டுமின்றி ஜீப் மீது கல் எறிந்து உள்ளனர் அதனால் ஜீப் சேதமடைந்துள்ளது எதிரிகள் நான்கு பேர் ஆயுதங்களை வைத்து இருந்துள்ளனர் அதிகாலை காட்டுக்குள் ஏன் லாரியை ஓட்டிச் சென்றனர் என்பதற்கு விளக்கமில்லை. காட்டுப் பகுதியில் சந்தன மரங்கள் உள்ளது மறுக்கப்படவில்லை. மரங்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது கல் எறிந்ததால் சுகுமாறனால் எதிரிகளை கைது செய்ய முடியவில்லை இதனால் சுகுமாறனுக்கு பயம் ஏற்பட்டதில் சந்தேகம் ஏதுமில்லை.
எனவே பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்பட்ட நியாயமான சந்தேகத்தின் காரணமாகவே லாரியை துரத்தி பிடிக்க முயன்றார் என்று கருத வேண்டும். எதிரிகள் கற்களை கொண்டு தாக்கியதாலும், ஆயுதங்களை வைத்து தாக்குவார்கள் என்ற பயத்தாலுமே சுகுமாறன் தற்காப்புக்காக சுட்டுள்ளார் என்றே கருத வேண்டும்.
எனவே சுகுமாறனை வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன் என்று கூறி நீதிபதி தற்காப்பு உரிமையின் பலனை சுகுமாறனுக்கு அளித்து விடுதலை செய்தார்.
Criminal Appeal No - 5/2009
Date - 07.03.2019
0 Comments