திருமணமான பெண் இறந்துவிட்டால் தாய், தந்தை சட்டப்பூர்வ வாரிசு இல்லை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

 திருமணமான பெண் இறந்துவிட்டால் தாய், தந்தை சட்டப்பூர்வ வாரிசு இல்லை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..


WP/9540/2018 Banda Venkata Ramanadha Krishna  Vs The District Collector

Dated 08.01.2020


திருமணமான பெண் இறந்தால் அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்த பி.வி.ஆர்.கிருஷ்ணா என்பவருக்கு விஜய நாகலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் 2013ம் ஆண்டு விஜயநாகலட்சுமி இறந்துவிட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில், விஜயநாகலட்சுமியின் தாயார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தனது மனைவியின் வாரிசாக சட்டப்பூர்வமாக அவரது தாயின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட கலெக்டருக்கும், அமைந்தகரை தாசில்தாருக்கும் கிருஷ்ணா மனு அனுப்பினார். அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தனது மனுவை பரிசீலிக்குாறு அரசுக்கு உத்தரவிட கோரி கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஸ்ரீதர் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.கோவிந்தசாமி நீதிபதியிடம், இந்து வாரிசுரிமை சட்டப்படி ஒரு ஆண் இறந்துவிட்டால் மனைவி, குழந்தை மட்டுமல்லாமல், அவரது தாயாரும் சட்டப்பூர்வ வாரிசுகளாகத்தான் கருதப்படுவதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது. இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே இது பொருந்தும்.  ஒரு பெண் இறந்து விட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள் ஆக முடியும். மணமான பெண் இறந்து விட்டால் அவரின் தாய் மற்றும் தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது. எனவே, விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே இடம் பெறும் புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15ம் தேதிக்குள் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்..

Post a Comment

0 Comments